அஜித் வராதது எல்லாம் ஒரு பிரச்னையா? எஸ்.பி.சரண் கேள்வி!
எஸ்.பி.பி. இறுதிச் சடங்குக்கு அஜித் வராதது எல்லாம் ஒரு பிரச்னையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் எஸ்.பி.சரண்.
பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம், உடல்நலக் குறைவால் கடந்த 25ஆம் தேதி காலமானார். 50 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி., சிகிச்சை பலனின்றி தன் இன்னுயிரை நீத்தார்.
எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர் தொடங்கி அனைவரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் தொடங்கி இந்திய சினிமா பிரபலங்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
அறிக்கை எதுவும் வெளியிடாத விஜய் கூட, தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற எஸ்.பி.பி.யின் இறுதிச்சடங்கில் நேரடியாகக் கலந்துகொண்டார். ஆனால், எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தாத அஜித், கடைசிவரை ஒரு அறிக்கை கூட வெளியிடாதது எஸ்.பி.பி. ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘அமர்க்களம்’ படத்தில் மூச்சுவிடாமல் பாடிய ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ உள்ளிட்ட பல பாடல்களை அஜித்துக்காகப் பாடியுள்ளார் எஸ்.பி.பி. அதுமட்டுமல்ல, அஜித் ஹீரோவாக அறிமுகமாவதற்கே எஸ்.பி.பி.தான் காரணம். இதையெல்லாம்விட, எஸ்.பி.சரணும் அஜித்தும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.
கடந்த சில நாட்களாக இந்த விஷயம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த எஸ்.பி.சரணிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
‘எனக்கும் அப்பாவுக்கும் அஜித் நல்ல நண்பர்தான். அவர் நேரடியாக வரவேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருந்தபடியே அவர் வருத்தப்படட்டுமே… அவர் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? அவர் எங்கிருந்து மரியாதை செலுத்தினால் என்ன? இப்போது இதெல்லாம் ஒரு பிரச்னையா?
அஜித் என்னிடம் போனில் பேசினாரோ, இல்லையோ… அதையெல்லாம் ஒரு விஷயமாக மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. தற்போது எஸ்.பி.பி. இந்த உலகத்தில் இல்லை. அந்த வருத்தத்தில் இருந்து அனைவரும் மீண்டுவர நேரம் தேவைப்படுகிறது. எங்கள் குடும்பத்தினர் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்’ என பதில் அளித்துள்ளார் எஸ்.பி.சரண்