மாமாவுக்கு ட்விட்டரில் நன்றிசொன்ன சமந்தா
ட்விட்டரில் தன்னை வாழ்த்திய மாமா நாகர்ஜுனாவுக்கு, நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான சமந்தா, இன்றைக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். கடந்த 10 வருடத்துக்கும் மேலாக ஹீரோயினாக நடித்துவரும் சமந்தா நடிப்பில் வெளியான கடைசி தமிழ்ப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்ட சமந்தா, குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசிப்பதால் தெலுங்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், திருமணம் ஆனபின்னரும் ஒரு நடிகை ஹீரோயினாகத் தொடர்ந்து நடிப்பது என்பது கஷ்டம். ஆனால், திருமணத்துக்குப் பின்னரும் ஹீரோயினாகவே நடித்து வருகிறார் சமந்தா.
ஊரடங்கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த சமந்தா, தோட்ட வேலைகள் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாக, காய்கறிகளை வீட்டில் விளையவைத்து, அதை சமையலுக்குப் பயன்படுத்தினார். மேலும், ராம் சரணின் மனைவி உபாசனா தொடங்கியுள்ள யூ ட்யூப் சேனலுக்காக ப்ரவுன் ரைஸில் தக்காளி சாதம் செய்து காண்பித்தார்.
இவற்றைவிட, ஃபேஷன் டிசைனிங்கில் சமந்தாவுக்கு அதிக ஆர்வம். தன்னுடைய கலைத்திறமையை வெளிப்படுத்த தருணம் பார்த்தவர், தற்போது SAAKI என்ற பெண்களுக்கான ஆடை விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளார். சமந்தா அக்கினேனி என்பதன் சுருக்கம்தான் SA-AKI.
சமந்தாவின் இந்தப் புதிய முயற்சியைப் பலரும் பாராட்டிவரும் நிலையில், நடிகரும், சமந்தாவின் மாமனாருமான நாகர்ஜுனா ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘உன்னுடைய புதிய ஆடை விற்பனையகத்துக்கு என்னுடைய வாழ்த்துகள். நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் என எனக்குத் தெரியும்’ என தெரிவித்துள்ளார் நாகர்ஜுனா.
Thankyou so much mama 💜 https://t.co/XyPR7EzmCO
— Samantha Akkineni (@Samanthaprabhu2) September 28, 2020
அதை ரீட்வீட் செய்துள்ள சமந்தா, ‘மிக்க நன்றி மாமா’ என தெரிவித்துள்ளார். இதேபோல் சமந்தாவின் புதிய பயணத்துக்கு கணவர் நாக சைதன்யாவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.