ஊரடங்கிலும் மரங்கள் நட்டு சமூக சேவை செய்துவரும் விஜய் பட நடிகர்!
நடிகர் சௌந்தரராஜா ‘வேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இருந்தாலும் அவர் இரண்டாவதாக நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் தான் சௌந்தரராஜா பிரபலமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்திலும் நடித்துள்ளார். ‘பிகில்’ ஆடியோ ரிலீஸில் கூட நடிகர் விஜய், இவரது சமூக நல செயல்களுக்காக பாராட்டினார்.
நடிகர் சௌந்தரராஜா மண்ணுக்கும் மக்களுக்கும் என்னும் சமூக நல அறக்கட்டளையின் மூலம் பல வகையில் மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். தற்போது சௌந்தரராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் “எனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் அரசு வழிகாட்டுதலின் படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏரிக்கரைகள், மலை குன்றுகள், பள்ளி,கல்லூரி, தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில் நட்டு அதை பாதுகாக்கவும் வழி வகை செய்திருக்கிறோம் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்திட எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.