உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி: மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
நீங்கள் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிப் பேசும் இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, சண்முகராஜன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட இந்தப் படம், மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக, சாதி ரீதியாக மக்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பதை, அனைவரும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் வெளிச்சம்போட்டுக் காட்டியது இந்தப் படம். இதில் வரும் தாத்தாவின் குரூரத்தை, மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்தப் படம், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். இரண்டாம் ஆண்டை படக்குழுவினர் சிறப்பாகக் கொண்டிருக்கும் இந்நிலையில், ‘நீங்கள் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி’ நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மாரி செல்வராஜ்.
Thank you all for all the love and support you have shown us! @beemji @Sridhar_DOP @Music_Santhosh @anandhiactress @am_kathir @iYogiBabu @pro_guna pic.twitter.com/kWQadebwLz
— Mari Selvaraj (@mari_selvaraj) September 28, 2020
‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ படத்தை தற்போது இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். லால், ராஜிஷா விஜய், யோகி பாபு, கெளரி கிஷண், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
திருநெல்வேலிக்கு அருகே ஒரு கிராமத்தையே செட் போட்டு படமாக்கி வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.